108 தேங்காய் உடைத்தும் பலன் இல்லையா? - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை
108 தேங்காய் உடைத்தும் பலன் இல்லையா? - நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை

108 தேங்காய் உடைத்தும் பலன் இல்லையா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை

பொதுவாக மக்கள் தேவதைகளிடம் செல்வதற்குக் காரணம், அங்கு வேண்டுதல்கள் மிக விரைவாக நிறைவேறுகின்றன. நீங்கள் ஒரு 108 தேங்காய் உடைக்கிறீர்கள் அல்லது 45 நாட்கள் மாலை போட்டு விரதம் இருக்கிறீர்கள் என்றால், அந்த தேவதைகள் உடனே தோன்றி “ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) என்று ஆசி வழங்கிவிடுவார்கள். நீங்கள் கேட்பது உங்களுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்று அவர்கள் பார்ப்பதில்லை.

இந்த பிரபஞ்சத்தை நடத்துவதற்காக கிருஷ்ணர் பல சக்திவாய்ந்த தேவர்களை நியமித்திருக்கிறார் — இந்திரன் (மழைக்கு), சூரியன் (வெளிச்சத்திற்கு), சந்திரன், வருணன் என்று. இவர்களை தேவதைகள் என்கிறோம்.

இவர்கள் நம்மைவிட மிகவும் சக்திவாய்ந்தவர்கள் — வரங்கள் கொடுக்கும் ஆற்றல் உடையவர்கள். ஆனால் இவர்களும் கிருஷ்ணரின் நிர்வாகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் மட்டுமே — பரம்பொருள் அல்ல.

அரசாங்கத்தில் collector, minister என்று பலர் இருக்கிறார்கள் — அவர்களிடம் சக்தி இருக்கிறது, உதவி கிடைக்கும். ஆனால் அவர்களே prime minister அல்ல. அதேபோலதான் தேவதைகளும்

ஸ்ரீமத் பாகவதத்தில் இதற்கு ஒரு கதை உண்டு. விருக்காசுரன் என்ற அசுரன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவர் காட்சி தராததால், கோபத்தில் தன் தலையையே வெட்டி பலி கொடுக்கத் துணிந்தான். உடனே சிவபெருமான் தோன்றி, “என்ன வேண்டும்?” எனக் கேட்டார். அந்த அசுரன், “நான் யார் தலையில் கை வைத்தாலும், அவர் தலை ஆயிரம் துண்டுகளாகச் சிதற வேண்டும்” என்றான். சிவபெருமானும் யோசிக்காமல் “ததாஸ்து” என்றார்.

அடுத்த கணமே அந்த அசுரன், “இந்த வரத்தை உங்களிடமே சோதித்துப் பார்க்கப் போகிறேன்” என்று சிவபெருமானைத் துரத்த ஆரம்பித்தான்! கடைசியில் மகாவிஷ்ணு ஒரு சிறு பிராமணச் சிறுவனாக வந்து, தன் புத்தியால் அந்த அசுரனையே அவன் தலையில் கை வைக்கச் செய்து அவனை அழித்தார். தேவதைகள் கொடுக்கும் வரங்களால் சில நேரங்களில் உலகத்திற்கே ஆபத்து விளைவதுண்டு (இரணியகசிபு ஒரு உதாரணம்).

கிருஷ்ணரின் ‘கருணை’ தரும் சிகிச்சை

ஆனால், நீங்கள் கிருஷ்ணரிடம் வரும்போது அவர் அப்படிச் செய்வதில்லை. கிருஷ்ணர் ஒரு புத்திசாலியான தந்தை போன்றவர். ஒரு குழந்தை கத்தியைக் கேட்டு அழுதாலோ அல்லது விஷத்தைக் கேட்டு அடம் பிடித்தாலோ, ஒரு நல்ல தந்தை அதைக் கொடுக்க மாட்டார்.

ஏனென்றால் கிருஷ்ணருக்குத் தெரியும், நீங்கள் கேட்பது உங்களுக்குப் பின்னாளில் ‘விஷமாக’ முடியும் என்று. எனவே அவர், “சரி மகனே, நீ கேட்டதைக் கொடுக்க மாட்டேன், ஆனால் உன்னைத் தூய்மைப்படுத்தி என்னிடம் அழைத்துச் செல்ல எதைக் கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுப்பேன்” என்பார்.

சரணாகதி அடைந்த குழந்தையின் பாதுகாப்பு

பக்தியில் நாம் எதையும் கிருஷ்ணரிடம் கேட்டு வாங்கத் தேவையில்லை. ஒரு வருடம் நிறைந்த குழந்தை அதன் தாயின் மடியில் படுத்திருக்கும்போது, “எனக்கு பசிக்கிறது, சாப்பாடு கொடு” என்று கேட்க வேண்டியதில்லை. குழந்தையின் தேவையைத் தாய் அறிவாள். அதேபோல, நாம் குருவிடமும் கிருஷ்ணரிடமும் முழுமையாகச் சரணடைந்துவிட்டால், நம்முடைய யோகக்ஷேமத்தைப் பகவானே பார்த்துக் கொள்கிறார்.

ஒரு பக்தனின் ஒரே பிரார்த்தனை இதுதான்: “கிருஷ்ணா, என்னை நீ சொர்க்கத்திற்கு அனுப்புகிறாயோ அல்லது நரகத்திற்கு அனுப்புகிறாயோ, அது உனது இஷ்டம். ஆனால் நான் எங்கு இருந்தாலும் உன்னுடைய தாமரைத் திருவடிகளை மறக்காமல் இருக்க வேண்டும். உனது திருநாமத்தைச் சொல்லும் பாக்கியத்தை மட்டும் எனக்குக் கொடு.”

தடைகளும் கிருஷ்ணரின் லீலையும்

சில நேரங்களில் நாம் பக்தி விதிகளைச் சரியாகப் பின்பற்ற முயலும்போது தோல்வி அடையலாம். அது ஏன் தெரியுமா? “நான் ஒரு பெரிய பக்தன், என்னால் புலன்களைக் கட்டுப்படுத்த முடியும்” என்ற ‘அகந்தை’ நமக்குள் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே கிருஷ்ணர் சில தோல்விகளைக் கொடுக்கிறார். “என்னால் எதுவும் முடியாது கிருஷ்ணா, நீ தான் எனக்கு உதவ வேண்டும்” என்று நாம் எப்போது முழுமையாகச் சரணடைகிறோமோ, அப்போது அவரே நம் புலன்களைக் கட்டுப்படுத்தத் தொடங்குகிறார்.

எனவே, கிருஷ்ணரிடமிருந்து பதில் வரவில்லை என்று வருந்தாதீர்கள். அவர் உங்களைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார். உங்கள் பொருளாதார நிலை உயரவில்லை என்றாலோ, ஆரோக்கியம் சரியாகவில்லை என்றாலோ கவலைப்பட வேண்டாம். கிருஷ்ணர் நமக்கு எது தேவையோ அதைச் சரியான நேரத்தில் தருவார்.

ஸ்ரீல பிரபுபாதரின் வழிகாட்டுதலின்படி, “நான் கிருஷ்ணரின் கருவி” என்ற உணர்வோடு செயல்படுவோம். நம்முடைய ஆசைகளை நிறைவேற்றுவதை விட, குருவையும் கிருஷ்ணரையும் திருப்திப்படுத்துவதையே வாழ்வின் லட்சியமாகக் கொள்வோம். கிருஷ்ணரிடம் முழுமையாகச் சரணடைபவர்களுக்கு மாயையின் பிடியிலிருந்து விடுதலை நிச்சயம்!

ஹரே கிருஷ்ணா!

Ask A Question

No questions yet. Why don’t you Ask A Question?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *